பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் முன்வைத்த வேண்டுகோளின்பேரில் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவீடன் நீதித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் தன்மீதான வன்புணர்வு குற்றச்சாட்டை நிராகரித்த அசாஞ் சுவீடன் நாட்டுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக லண்டனில் அமைந்துள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.
அசாஞ் ஈக்குவடோர் தூதரகத்தில் தங்கியிருந்த காரணத்தால் வழக்கை முன்னெடுத்து செல்லமுடியாத நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அசாஞ் மீதான வன்புணர்வு வழக்கை கைவிடுவதற்கு சுவீடன் வழக்குரைஞர்கள் தீர்மானித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அசாஞ்-இன் அரசியல் தஞ்சம் ஈக்குவடோர் அரசால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பிணை நிபந்தனைகளை முறியடித்த குற்றச்சாட்டின்பேரில் 50 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அசாஞ் தற்போது லண்டனில் அமைந்துள்ள பெல்மார்ஷ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
அசாஞ் குற்றம் செய்திருக்கலாமென்ற சந்தேகம் இன்னும் தமக்கு இருப்பதால் வழக்கு தொடர்பான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சுவீடன் பொது வழக்குரைஞர்களின் துணை இயக்குனர், ஈவா-மேரி பெர்சன் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் ஸ்டொக்ஹோம் நகரில் நடைபெற்ற விக்கிலீக்ஸ் மாநாட்டிற்குப் பின்னர் இரண்டு பெண்களுக்கு எதிராக வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்களை அசாஞ் மேற்கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது.
ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அசாஞ் ஆரம்பத்திலிருந்தே மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.