வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு விசேட ஆராதனைகள் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சேயோன் தேவாலயம் உட்பட கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிரார்;த்தனைகள் இடம்பெற்றதுடன், மத தலைவர்கள் மற்றும் கலந்து கொண்ட பொதுமக்களால் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிரதேச மதகுருமார்கள், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை உறுப்பினர்களாக எஸ்.நல்லரெட்ணம், எஸ்.தர்மலிங்கம், திருமதி.ப.லெட்சுமி, புதுக்குடியிருப்பு கிராம அதிகாரி சி.வரதராஜன், கறுவாக்கேணி கிராம அதிகாரி எஸ்.பிரபு, கல்குடா ஊடகவியலாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.எம்.எம்.முர்ஷித், செயலாளர் ந.குகதர்சன் உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை அசெம்பிளி ஒப்கோட் தேவாலய போதகர் ஜி.லக்ஸ்மணகாந்தனால் ஆராதனைகள் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை திரேசாள் ஆலய பங்குத்தந்தை பி.சுகந்தன், கோறளைப்பற்று ஐக்கிய போதகர்கள் தலைவர் போதகர் எஸ்.மகேந்திரன், மயிலங்கரச்சை விகாராதிபதி ஸ்ரீ மகிந்தாராம ஆகியோரினால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.





