பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு மாத்திரமே இதனை விரைவாக அனுமதித்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன.
அதில் இருக்கும் சில உள்ளடக்கங்கள் அடிப்படை உரிமைகளை மீறும்வகையில் இருக்கின்றன. அதனால் இந்த சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ள சுதந்திர கட்சிக்கு எந்த தேவையும் இல்லை.
இதுதொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம், அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சட்டங்கள் எமது நாட்டுக்கு பொருத்தமானவையல்ல. அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய தேவை எமக்கில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனுமதிக்க ஒருபோது இடமளிக்கமாட்டோம்”எனவும் மேலும் குறிப்பிட்டார்.





