ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில், ஆசிரியர் தகுதித் தேர்வில், பிரதான பாடத்திற்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக இலட்சக் கணக்கானோர் காத்திருப்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் அரச தரப்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்ற உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வுக்கு தடை கோரி பரமானந்தம் மற்றும் சக்திவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் பகுதி பரீட்சை ஜூன் 8ஆம் திகதியும், இரண்டாம் பகுதிக்கான பரீட்சை 9 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






