பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.
இவ்விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2ஆவது முறையாக பிரதமர் ஆனார்.
அவரைத் தொடர்ந்து ஏனைய அமைச்சர்கள் பதவியேற்கின்றார்கள். பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்களாகப் பதவி ஏற்கிறார்கள்.
மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், முன்னாள் கர்நாடகா முதல்வர் சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பாஸ்வான், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்று வருகின்றனர்.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014ஆம் ஆண்டு தனித்து ஆட்சியைப் பிடித்த போது கூட்டணிக் கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதைப் போல், இந்த முறையும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.
வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 8,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இடவசதியைக் கருத்திற்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






