
தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேயக் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது.
அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.
இதனையடுத்து அநாமதேய கடிதம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று மாலை தொடக்கம் நல்லூர் ஆலய சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், நல்லூர் சூழலில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், வெளி மாவட்டத்தவர்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூரில் நாளை மறுதினம் வைகாசி விசாக உற்சவம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை நாளை மறுதினம் தமிழ் மக்கள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
