குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதியும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பிரதமரும் போட்டிப் போட்டுக் கொண்டு பாதுகாக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, நாடு இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் அனைத்திற்கும் இரண்டு அரச தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், “அமைச்சர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமித்துள்ளமை இதுவே முதல் முறையாக காணப்படுகின்றது.
எதிர்வரும் மாதம் 18,19 ஆம் திகதிகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் இடைப்பட்ட காலத்தில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்தவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரத்தின் ஊடாக திசை திருப்பி விடுவார்” என்று அவர் குறிப்பிட்டார்.