அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையத்து இரு நாடுகளும் சில வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவின் புகழ்ப்பெற்ற ஹூவாவி நிறுவனத்தின் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இணைத்தது.
இதனையடுத்து கூகுள் நிறுவனம் ஹூவாய் கைத்தொலைபேசியுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கூகுள் பிளே வசதி, பாதுகாப்பு செயலி என அனைத்தையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தது.
இந்த திடீர் அறிவிப்பால், ஹூவாவி பயனாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் 90 நாட்களுக்கு இந்த தடையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ‘அவசரமாக பிறப்பிக்கப்பட்ட இந்த தடையால் அந்த நிறுவனம் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த தடை 90 நாட்களுக்கு தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் அறிவித்தபடி தடை நிச்சயம் நீடிக்கும்’ என குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஹூவாய் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரென் செங்க்ஃபி செய்தியாளர்களுக்கு கருத்து வௌியிடுகையில் ‘எங்களை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுள்ளது. எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் இந்த தடையால் நாங்கள் பெரிய பாதிப்பு அடையப்போவதில்லை. இந்த முடிவினால் ஹூவாவியின் 5ஜி திட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த 5ஜி தொழில்நுட்பத்தால் அடுத்த 2, 3 ஆண்டுகளுக்கு ஹூவாயின் இடத்தை மற்ற நிறுவனங்கள் பிடிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.