சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரச படைகள் நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 21 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிரிய – ரஷ்ய படைகள் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் பொதுமக்கள் 229 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 727 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.சபை தெரிவித்திருந்தது.
சிரியாவில் அரசுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





