உறங்கும் யானைக்குட்டியை பறவைகளோம், வண்டுகளோ அண்டாமல் இருப்பதற்காக அதன் தாய் சிறிய மரக் கிளையை தன் தும்பிக்கையால் பிய்த்து குட்டியின் உடல் முழுவதும் பரவும் வண்ணம் விசிறி விடுகின்றது. இதனை கண்ட வனவிலங்கு கண்காணிப்பாளர் யான் ஹன்லு, அந்த காட்சியை தனது ஔிப்படக்கருவியில்
பதிவு செய்து கொள்கிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹன்லு, “இந்த காணொளியில் ஒரு குழந்தை யானை உறங்குகின்றது, அதன் தாய் அதற்கு உதவும் வகையில் நுளம்போ அல்லது வேறு பூச்சியினங்களோ நெருங்காமல் இருப்பதற்காக சிறிய மரக்கிளையை பிய்த்து தன் குட்டியின் மீது விசிறி விடுகின்றது.
அது மட்டுமன்றி விசிறுவதால் குட்டிக்கு நல்ல காற்றோட்டம் கிடைப்பதுடன் உறங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கின்றது” என்று கூறினார்.
இந்த அன்பான தாயும், அதன் குழந்தையுடன் சேர்ந்து 8 பேர் கொண்ட குடும்பமாக வசித்து வருகின்றன. ஒரு வயதாகும் இந்த குட்டி யானை அனைத்து குடும்ப உறுப்பினரதும் கவனத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது.
“பொதுவாக வனங்களில் குட்டி யானைகள் அவற்றின் பெற்றோரின் வயிற்றுக்கு கீழேயே பயணிக்கின்றன. அதனால் அவற்றை தீண்டுவது கடினம். வளர்ந்த யானைள் வழக்கமாக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குட்டிகளை சுற்றிவளைத்தே நடக்கின்றன.
அத்துடன் கூட்டத்தை பாதுகாக்கும் தலைமை யானைகள் 10 மீற்றர்களுக்கு அப்பால் பயணிக்கும். தமது சுற்றுப்புறம் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில், குட்டி யானைகள் விளையாடுவதற்கும், உறங்குவதற்கும் அனுமதிக்கப்படுகின்றன. ஏனைய வளர்ந்த யானைகள் பாதுகாப்பு வழங்கும் வகையில் உன்னிப்பாக இருக்கும்” என்று யான் ஹன்லு தெரிவித்தார்.
பொதுவாக பெரிய யானைகள் தரையில் படுத்து உறங்காது, அது அவற்றின் இதயம் மற்றும் ஏனைய உறுப்புகளுக்கு பாதிப்பாக அமையும் என்று கூறிய ஹன்லு, குட்டி யானைகள் அவ்வாறு உறங்குவது அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.
குட்டி யானைகள் ஒரு தடவைக்கு 10 நிமிடங்கள் என்ற வகையில் பொதுவாக 2 அல்லது 3 மணித்தியாலங்கள் உறங்கும் அல்லது ஒரு நாளைக்கு 3 தொடக்கம் 4 மணித்தியாலங்கள் வரையும் உறங்கும். அது அவற்றின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
யானைகள் என்பது உலகில் அருகி வரும் மிகவும் முக்கியமான வனவிலங்காக கருதப்படுகிறது. எனினும், அவை சில விஷமிகளின் செயற்பாடுகள் காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. காடுகளில் மரங்கள் வளர்வதற்கும் அவை தழைத்தோங்குவதற்கும் யானைகளின் செயற்பாடுகளும், அவற்றின் நடமாட்டமும் மிகவும் அத்தியாவசியமாகின்றன.
