“ஏழைகளுக்கு கனிவோடே செவிசாய்| அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.
ஒடுக்குவோரின் கரங்களிலிருந்து ஒடுக்கப்பட்டோரை விடுவி| நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு.
கைவிடப்பட்டோருக்குத் தந்தையாய் இரு| அவர்களின் அன்னையருக்கு துணைவன் போல் இரு| அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்| தாயை விட உன் மீது அன்பு கூர்வார்.”
நீதிக்கான போராட்டத்தில் பின்னிற்பவரை தமக்கான அவர்களது போராட்டத்தில் இறைவன் கைவிட்டு விடுவார். அடுத்தவருக்கு நாம் என்ன அளவு கோலைப் பயன்படுத்துகின்றோமோ, அதே அளவால்தான் நமக்கும் அளக்கப்படும். இதுதான் உலக நியதி. இன்று அடுத்த வீட்டில் அநியாயம் நிகழ்கின்றபோது தட்டிக் கேட்க முன்வராது அதினின்றும், நமக்கென்ன என்கின்ற சிந்தனையுடன் விலகி இருக்கலாம். ஆனால் நாளை அதே ஆபத்து நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது நமக்காகக் குரல் கொடுக்க அடுத்த வீட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
நான்காம் நிலை
ஒரு தாயும், ஒரு மகனும்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
ஒரு தாய் தன் பிரசவத்தில் தன் மகவை முதலில் சந்திக்கிறாள் .. ..அந்தச் சந்திப்பிலேதான் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். .. ..?
தாய்மையின் பூரிப்பு, .. .. ஒரு சாதனையின் பூரிப்பு, .. .. தன் உடலிலே உருவான தன் இரத்தத்தையும், சரீரத்தையும் காண்பதிலே அங்கே ஒரு நிறைவு!
முப்பத்தி மூன்றாண்டு காலம் .. .. அவளின் உழைப்பிலே வளர்ந்த செல்வம்.. .. இன்று புழுதிக்குச் சமனாக .. .. தாங்குமா தாயின் உள்ளம் ?
தன் பிள்ளைக்கு நோயென்றால் அதைவிடவும் துடித்துப் போய்விடும் தாய்மை, உருக்குலைந்து.. .. முகம் சிதைந்து .. .. குற்றவாளிபோல, பெற்றபிள்ள அழைத்துச் செல்லப்படுவதை எப்படிச் சகித்துக் கொள்ளும் ? .. .. மனதிலே பொறுத்துக் கொள்ளும்?
இன்று மனித மனங்களில்தான் மனித நேயத்திற்குப் பெருந்தட்டுப்பாடாயிற்றே!
எவர் எங்கு துன்புற்றாலும் அவர் நம்மவர் இல்லையென்று உறுதி செய்து கொண்ட பின் எதையுங் கண்டு கொள்ளாத மனிதர்களாக எம்மில் பலர்…!
மௌனத்தில் மனச்சாட்சியைத் துயில் கொள்ள விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்ற மனநிலையுடன் நாங்கள்.
வேதனைப்படும் இயேசுவிடம் சொல்லுவோம்:
“தாயின் வயிற்றில் உருவானாலும் .. .. அவள் மனதை உடைக்கத் தயங்காதவன் நான் இயேசுவே... .. துன்பப்படும் தாய்க்குலத்தை நினைத்தும் பாரா மனிதம் நான் இயேசுவே .. ..பார்வையாளனாய் நான் இருந்ததுபோதும் .. ..அன்னையர் கண்ணீரைத் துடைக்கும் பங்காளனாய் மாறவேண்டும் இயேசுவே. ”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.