சென்னை சாலி கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்தின் இல்லத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற ச.ம.க. தலைவர் சரத்குமார் அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் விஜயகாந்தின் உடல்நலம் பற்றி சரத்குமார் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சரத்குமார், “விஜயகாந்தின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே வருகைதந்திருந்தேன். அவருடன் பழையகால நினைவுகளை பகிர்ந்து கொண்டேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. அரசியல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அவர் மீண்டும் உடல்நலம் பெற்று வரவேண்டும்” என கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்காக தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன் என சந்திப்பிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் விஜயகாந்துடன் சந்தித்து பேசினார். இதனால் தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறுகின்றது என்பது தெரியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என அக்கட்சியினர் கூறி வந்தனர். பா.ஜ.க.வும் இதனை உறுதியாக கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
