
தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள புதுக்குடியிருப்பு கடலோரப்பகுதியில், பெரிய சிலிண்டர் போன்ற பொருள் ஒன்று கரையொதுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல்படை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சிலிண்டர்போல் இருந்த அந்த பொருள் 12 அடி நீளம், இரண்டே கால் அடி சுற்றளவில் இருந்தது. அதில், பிரமோஸ் என்ற ஆங்கில எழுத்தும், 24-10-2016 என்ற திகதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அது, ஏவுகணையை இயக்கக்கூடிய எரிபொருள் பீப்பாவாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
இதுகுறித்து, கடலோரக் காவல்படை பொலிஸார் உச்சிப்புளி விமானத்தளப் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த, விமானத்தளப் பொலிஸார் மற்றும் விண்வெளி ஆய்வுத்துறை அதிகாரிகள் அந்தப் பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்ததில், அது பிரமோஸ் ஏவுகணையின் இயந்திரப்பகுதி எனத் தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “இது, கரையில் இருந்து கடலில் உள்ள கப்பலைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையின் இயந்திரப்பகுதி. ஒடிசா மாநிலம் சண்டிபூர் கடற்கரையில் கடந்த 2017ம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டது.
தரையில் இருந்து அழுத்தம் கொடுத்து ஏவுகணை பறக்கும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரப்பகுதிகள் இரண்டு கட்டங்களாக தானாகவே கழற்றிவிடப்படும். அதில், இரண்டாவதாக கழற்றி விடப்பட்ட பகுதி இது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை” என்றனர்.
தொடர்ந்து, மண்டபம் அருகேயுள்ள ஐ.என்.எஸ்.பருந்து கடற்படைத் தளத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் அந்த பொருள், ட்ராக்டரில் ஏற்றப்பட்டு தேவிபட்டினம் கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடலோரப் பகுதியில் கரையொதுங்கி, மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்தப்பொருள் குறித்த மர்மம் விலகியதையடுத்து, புதுக்குடியிருப்பு பகுதி மீனவர்கள் நிம்மதி அடைந்தனர்.
