இந்தநிலையில் விண்வெளியில் செயற்கை கோள்களை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி பரிசோதனையை இந்தியா அண்மையில் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோள் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த தகவலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், மிஷன் சக்தி சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியமை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறிகையில், “செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் அவதானித்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.
அதேசமயம், செயற்கை கோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும், உடைந்து சிதறிய செயற்கைக் கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






