தி.மு.க.வில் இருப்பது, ‘குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்’ என்ற தலைப்பில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வாரிசுகள் என்பதற்காக மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுப்பதில்லை. கட்சியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதால் தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்கள், தந்தையுடன் சேர்ந்து கட்சிக்கு ஆற்றிய பணிகள் புறந்தள்ளப்பட வேண்டுமா?
அதேபோல், டாக்டர் கலாநிதி வீராசாமி , ஆற்காடு வீரசாமியின் குடும்ப வாரிசு மட்டுமன்றி, கொள்கை வாரிசுகளில் ஒருவராகத் திகழ்பவர். எனவே அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும்.
தமிழச்சி தங்கபாண்டியன், கட்சிப் பணிக்காக பேராசிரியர் பதவியைத் துறந்து, தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர்” என வாரிசுகளை ஏன் களமிறக்கினோம் என்று முரசொலியில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி (வடசென்னை) தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), க.பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), கருணாநிதியின் மகள் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
