
80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 73 தொகுதிகளைப் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.
ஆனால் இம்முறை சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் தனியாக களமிறங்கியுள்ளது. இதனால் பா.ஜனதாவின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் பேசுகையில், “கடந்த தேர்தலில் எங்களுக்கு 45 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 73 தொகுதிகளை வென்றோம்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். எனவே சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லை. 74 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அரசின் நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாக இருந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் அரசுகள் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆனால் பா.ஜனதா அரசு சிறப்பாக செயற்படுகிறது. எங்களுடைய உழைப்பும், பிரதமர் மோடியின் பெயரும் எங்களுக்கு 74க்கும் அதிகமான தொகுதிகளை பெற்றுதரும்” என்று கூறினார்.
