முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒரு அணியில் நின்று அனுஷ்டிக்கவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) கல்லடி, போய்ஸ் ஒஃப் மீடியாவில் நடைபெற்றது.
இதன்போது, முரண்பாடுகளைக் களைந்து, தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பிவிராஜ் தெரிவித்தார்.
இதன் நோக்கமாகவே, யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து அனைத்து பொது அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஓரணியில் நின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி இன்று தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் தமிழர்களுக்கான எந்தவித நன்மையினையும் செய்யாத நிலையே இருந்துவருவதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
அரசியல்வாதிகள் மே-18 நெருங்கும்போதே முள்ளிவாய்க்காலை நினைத்துப் பார்ப்பதாகவும் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லையெனவும் குறிப்பிட்டார். ஆனால் நினைவேந்தல் நிகழ்வினை அவர்கள் உரிமை கோரமுடியாது எனவும் தெரிவித்தார்.





