தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் தான் அது தெரியும்.
பாஜகவை நான் விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்? திராவிடக் கட்சிகளை தமிழ்நாட்டில் வரவிட மாட்டோம் என்கிறார்கள்.
அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் அல்லவா? தேசியக் கட்சி என சொல்லிக்கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்?” என குறிப்பிட்டுள்ளார்.





