உடன்பாடற்ற பிரெக்ஸிற் வடஅயர்லாந்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு பேரழிவான விளைவுகளை உண்டாக்குமென முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரெக்ஸிற்றின் பின்னரான எதிர்கால உறவுகள் பற்றிய ஒப்பந்தம் எதுவுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் அது கடுமையான ஐரிஷ் எல்லை ஏற்படுவதற்கு வழிவகுக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாது எனும் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கும் ரொனி பிளேர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொறுப்புணர்ச்சியுடைய எவரும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை ஆதரிக்க மாட்டார்களென தெரிவித்த பிளேயர், உடன்பாடற்ற பிரெக்ஸிற் பொருளாதாரரீதியாக பிரித்தானியாவுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையுமெனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் வட அயர்லாந்தின் சமாதான முன்னெடுப்புகளில் அரசியல்வாதிகள் பொறுப்பற்றமுறையில் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு வலியுறுத்திவரும் முக்கிய அரசியல் பிரமுகர்களில் முன்னாள் பிரதமர் ரொனி பிளேரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.





