ராமேஸ்வரம் சுங்க இலாகாவினர் தனுஷ்கோடி பகுதியில் ரோந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற முச்சக்கர வண்டியில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள், இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த கணேசன் (65), அவரது மனைவி சோமாலை (60), மகள்கள் குமுதினி (31), மலர் (28), மலருடைய மகன் ஜெகன் (10) ஆகியோர் இலங்கை அகதிகள் என்பது தெரிய வந்தது.
அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக உடைச்சியார் வலசை கிராமத்தைச் சேர்ந்த முகவர் ஆனந்த் (35) என்பவர், தெற்குக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (40) என்பவருடைய முச்சக்கர வண்டியில் அழைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கணேசன் தெரிவிக்கையில் “இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நாங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக இங்கு வந்து மதுரை ஆனைமலை முகாமில் தங்கி இருந்தோம்.
மதுரையில் போதிய வருவாய் இன்றி தவித்த நாம், இலங்கையில் பணிபுரிந்து வரும் என் மகனிடமே சென்று விடலாம் என்று முடிவு செய்தோம். இதையடுத்து, முகவர் ஆனந்த் என்பவரை அணுகியபோது எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி, ஒரு நபருக்கு 25 ஆயிரம் வீதம், 5 பேருக்கும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தனுஷ்கோடி சென்று இலங்கையில் இருந்து வரும் படகில் எங்களை அனுப்பி வைப்பதாகக் கூறி முச்சக்கர வண்டியில் அழைத்து வந்தபோது சுங்க இலாகாவினர் எங்களை பிடித்து விட்டனர்” என்று கூறினார். இதையடுத்து பொலிஸார், இலங்கை அகதிகள் உட்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






