செயல்பாட்டு காரணங்கள் மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 8 விமானங்களும் ஐதராபாத்திலிருந்து 6 விமானங்களும், ஜெய்பூரிலிருந்து 3 விமானங்களும் கடந்த 9ஆம் திகதி புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டன.
மேலும், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிருடனான வானிலை காணப்படுகின்றது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனி விலகாததால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வீதிகளில் வாகனங்களை இயக்கிவருகின்றனர்.





