மக்களுக்கு நன்மை செய்யும் வகையிலேயே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மத்திய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்.
அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும். அரசை தாக்கிப் பேசவேண்டும் என்பதற்காகவே கிராம சபை கூட்டத்தை திமுக நடத்துகிறது, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென கூட்டத்தை நடத்தவில்லை“ என தெரிவித்துள்ளார்.





