படைப்பு சுதந்திரம் கருதி வர்மா திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், துருவ் விக்ரமின் எதிர்கால நலன்கருதி எதுவும் பேச விரும்பவில்லை என்றும் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.இயக்குநர் பாலா வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புகிடைத்தது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் மொழியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
வர்மா என்ற பெயரில் இத்திரைப்படத்தை பாலா இயக்க, துருவ் விக்ரம் இதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். கடந்த 7ஆம் திகதி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக அறிவித்தது. புதிய குழுவுடன் இணைந்து வர்மா திரைப்படம் மீண்டும் தமிழில் உருவாக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திரைப்படத்தின் இயக்குநர் பாலா கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





