தமிழ் நாட்டின் மீது கவனம் செலுத்தாத வகையிலேயே மத்திய அரசின் இடைக்கால வரவு- செலவு திட்டம் காணப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்நாடாளுமன்றம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வரவு- செலவு திட்டம் குறித்து கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது,
“மத்திய அரசு அறிவித்திருக்கும் இடைக்கால வரவு- செலவு திட்டத்தை பார்க்கின்றபோது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால், அவர்களுக்கு கூறப்பட்டுள்ள மானியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பொருளாதார நிபுணர்கள் இதனை எளிதாக கண்டுப்பிடித்து விடுவார்கள். சாதாரண மக்களால் இனங்காண்பது கடினம்.
மேலும் தேர்தலின் போது மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கு பணத்தை கொடுப்பது போன்றே இந்த நிதியறிக்கையும் உள்ளது.
இதேவேளை நடைபெறவுள்ள தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து விடுவார்களாயின், அவர்கள் குழப்பம் வாய்ந்த குறித்த வரவு- செலவு திட்டத்தை தொடர்வார்கள் என்று கூற முடியாது” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.





