கல்குடாவிலே முஸ்லிம் அரசியல் செய்கின்றவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை முன்னேற்ற முனைப்பு செய்ய வேண்டும் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தனது போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் உள்ளக கொங்கீரிட் பாதை திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
எல்லாக் கட்சிகளுடன் இணைந்த கலவன் அரசாங்கம் தான் இந்த அரசாங்கம். கல்குடாவிலே முஸ்லிம் அரசியல் செய்கின்றவர்களுக்கு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பு அவர்களிடத்தில் இருந்ததா என்று எனக்கு தெரியாது.
நான் அமைச்சராக வந்ததும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் வகையில் புதிய கட்டடங்களை கொண்டு வர முனைந்த போது அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் கட்டடம் இல்லாமல் போய் விட்டது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை புனரமைப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் தான் முடியும். சுகாதார இராஜாங்க அமைச்சரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல தடவை வந்துள்ளார். ஆனால் எதுவும் செய்யவில்லை.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை முன்னேற்றும் வகையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் செயற்பட வேண்டும். வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கல்குடா தொகுதியின் அரசியல்வாதிகளிடம் அழுத்தங்களை கொடுத்து அபிவிருத்தி செய்யுங்கள்.
இது விடயமாக பல தடவை சுகாதார அமைச்சருடன் பேசிய போது அவர் நினைக்கின்றார் இராஜாங்க அமைச்சர் இவ்விடயமாக எதுவும் சொல்லவில்லை இவர் இதனை சொல்கின்றார் என்று நினைக்கின்றார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கப்பட்டதுடன், உள்ளக கொங்கீரிட் பாதை மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எப்.மதன் தலைமையில் இடம்பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.













