எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு விஜயம் செய்து அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்தைகளை மேற்கொண்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனும், தமிழக அமைச்சர்களான தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 21 சட்டசபைத் தொகுதிகளில் பா.ஜ.க. ஆதரவளிக்கும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதேவேளை, தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





