மட்டக்களப்பு நகரில் உணவகங்களைச் சேதப்படுத்திய சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உணவகங்கள் சில சேதப்படுத்தப்பட்டன.
ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வெள்ளிக்கிழமையன்று ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அன்றைய தினம் பொதுப்போக்குவரத்து, அரச தனியார்துறை சேவைகள், வங்கிகள், சந்தைகள், பாடசாலைகள் என்பன இயல்பு நிலையில் இயங்கின.
இந்நிலையில், மட்டக்களப்பு முகத்துவார வீதியில் உணவகம், தாக்குதலுக்குள்ளாகியதில் அந்த உணவகத்தின் முன் கண்ணாடிகள் முற்றாகச் சேதமடைந்தன.
இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாகவுள்ள உணவகமும் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தாக்கப்பட்டதில் அதன் முன்பக்க கண்ணாடிகள் சேதடைந்துள்ளன.இச்சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





