மன்னார், புனித சவேரியார் பெண்கள் பாடசாலையில் தேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வு இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.தேசிய ரீதியில் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ‘பிள்ளைகளிடம் இருந்து கற்று கொள்ளுங்கள்’ எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பாடசாலையின் காலை ஒன்று கூடலின் போது இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை ரீதியில் மாணவர்கள் எவ்வாறு போதைப் பொருட்களின் பாவனையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றச்செயல் ஒன்றினால் பாதிக்கப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது மன்னார் நகர மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் ஊடகவியலாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் மாணவர்களுடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், தொடர்சியாகக் குறித்த போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.





