சென்னையில், குப்பைத்தொட்டியில் கிடந்த கட்டுக் கட்டான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கண்டெடுத்த தொழிலாளியை பொலிஸார் கைதுசெய்தனர்.சென்னை ஓட்டேரி பவானி எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோனி (48). குப்பை தொட்டியில் கிடக்கும் பழைய பொருட்களை சேகரித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று (23ம் திகதி) காலை, சேத்துப்பட்டு பகுதியில் வழக்கம்போல பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சேத்துப்பட்டு நேரு பூங்கா சுரங்கப்பாதை அருகே உள்ள ஒரு தொட்டியில் குப்பையைக் கிளறியபோது அதில், மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக கிடந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அவற்றை அள்ளிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அதன் பின்னர் ஓட்டேரி நெடுஞ்சாலை பகுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த சிலரிடம் “என்னிடம் பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறன அதை, உங்களால் மாற்றித்தர முடியுமா?” எனக் கேட்டுள்ளார். இதுகுறித்த தகவலறிந்த அயனாவரம் உதவி பொலிஸ் ஆணையாளர் பாலமுருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தோனியை பிடித்து விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து அவருடைய வீட்டுக்குச் சென்ற பொலிஸார், அங்கிருந்த 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், ‘கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்களை குப்பைத்தொட்டியில் வீசியவர் யார்?’ என விசாரணை நடத்தி வருகின்றனர்.





