உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிகழ்ந்தால் அயர்லாந்தின் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளுக்கு பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட வட அயர்லாந்து, முகம்கொடுக்க நேரிடுமென ஐரோப்பிய ஆணையத்தின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் மார்கரிடீஷ் ஷினாஸ் இன்று தெரிவித்தார்.உடன்பாடற்ற பிரெக்ஸிற் நிகழும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளை போலவே அயர்லாந்தும் பிரித்தானிய இறக்குமதிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய சுங்க மற்றும் ஏனைய சோதனைகளை நடைமுறைப்படுத்துமா எனும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மார்கரிடீஷ் ஷினாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
மார்கரிடீஷ் ஷினாஸ் இன் இக்கருத்துக்கு பதிலளித்த பிரதமர் தெரேசா மே-யின் செய்தித்தொடர்பாளர், கடுமையான ஐரிஷ் எல்லையை தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா நிச்சயமாக முன்னெடுக்குமென கூறினார்.
பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டதற்கு பிரெக்ஸிற்றின் பின்னரான ஐரிஷ் எல்லை கட்டுப்பாடு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது..





