(ஜெய்ஷிகன்,பாண்டி)

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான ஸ்மாட் சமூக வட்டம் அங்குரார்ப்பண நிகழ்வும், பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், மாவட்ட செயலக சிரேஷ்ட மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ராஜசுரேஸ், திட்ட இணைப்பாளர் க.சுமன், பிரதேச செயலக தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ம.சுரேஸ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஸ்மாட் சமூக வட்ட உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை தமிழ், கண்ணகிபுரம், புதுக்குடியிருப்பு, கல்மடு, கல்குடா ஆகிய கிராமங்களுக்கான ஸ்மாட் சமூக வட்டத்திற்கான முகநூல் அங்குரார்ப்பணம் அதிதிகளால் செய்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை தமிழ், கண்ணகிபுரம், புதுக்குடியிருப்பு, கல்மடு, கல்குடா ஆகிய பிரிவுகளில் இருந்து பத்து நபர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு இடம்பெற்றதுடன், இக்கருத்தரங்குகளில் கலந்து கொண்ட ஐம்பது பேருக்கு இங்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, மண்முணை வடக்கு மட்டக்களப்பு, ஆரையம்பதி ஆகிய செயலகப் பிரிவுகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தெரிவு செய்யப்பட்;ட ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக சமூக விழிப்புணர்வூட்டல், சமூக பிரச்சனைகள், உற்பத்தி பொருட்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உட்பட்ட பல்வேறு விடயங்களை கிராம மக்களே வெளி உலகிற்கு கொண்டு வரும் செயற்றிட்டமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.






