மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக எவ்வாறான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் துரிதமான விசாரணைகள் இடம்பெறும் என்று நாம் எதிர்ப்பார்த்திருந்தோம். இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உண்மைகளும் வெளியில் கொண்டுவரப்பட்டன.
எனவே, இதுதொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை அரசாங்கம் இங்கு தெரியப்படுத்த வேண்டும். இதில் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிட்டுள்ள அர்ஜுன மகேந்திரன் இன்னும் சுதந்திரமாகத் தான் இருக்கிறார். இவரைக் கைது செய்ய முடியாமல் தான் அரசாங்கம் இருக்கிறது.
மக்களின் பணம் தான் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் இதுகுறித்த பதிலை வழங்கியே ஆகவேண்டும். இதனால், நாட்டுக்கு இன்று கடனை செலுத்தக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் இலஞ்ச – ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன்னிறுத்தியே ஆட்சிபீடத்துக்கு வந்தது. எனவே, மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.





