மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.வாகரை, அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.
இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலட்சுமியின் கணவராவார்.
மீன் பிடித்தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
அவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களால் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களும் தேடியும் கண்டபிடிக்கப்படாத நிலையில், இன்று காலை தட்டுமுனை ஆற்றிலிருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் வலிப்பு நோய் குணம் உள்ளவர் என்று தெரிவித்த உறவினர்கள் சேறும் சகதியுமான ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக வாவியில் வீழ்ந்து சேற்றில் புதையுண்டிருக்கலாம் என ஊகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் உடற்கூறாய்வு சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.





