செல்வி.செல்வமணி வடிவேல்
திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெறுமானம் மிக்க மதிப்பு மிகு மாண்புறு பெண்ணாய் வாழ்ந்தவர்.
ஆங்கிலத்தில் புலமை மிகு ஆற்றலை வெளிப் படுத்தியவர் சிறந்த தமிழ் மேடைப் பேச்சாளராகவும் விளங்கியவர்.
சமூகம் அரசியல் என அக்கறையுடன் செயல் பட்ட ஆளுமைத் திறன் வாய்ந்த பெண்ணாய் பலருக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்த தமிழ் உணர்வு மிக்க பெண்.லண்டனில் தமிழ் கல்வி தொடர்பில் அக்கறையுடன் செயல் பட்ட ஆளுமை இன்று காலமானார். அன்னார்க்கு தட்டுங்களின் அஞ்சலிகள்
Thattungal.com
திருக்கோணேசச் செல்வி
நீங்கள், இனம்-மொழி-மண் மீது தீராப்பற்றுக் கொண்ட திருக்கோணேசச் செல்வி.
மருத்துவம் தோற்ற போது உமை இழந்தோம்.
இனி மருத்துவம் வெல்லும் போது உங்களைத் தேடுவோம்.
உங்களின் மாணவ விதைகள், உலகெங்கும் வேரூன்றி விருட்சமாய் வானுயர்ந்து நிற்கின்றன.
அறிவின் ஊற்றுக்கண்ணாய்த் திகழும் கல்விச் செல்வத்தை, மானிடர்க்கு அள்ளி வழங்கும் பெரும் பாக்கியம் பெற்ற மாமனிதர் நீங்கள்.
இனமுரணால், தம்பியை இழந்தீர்கள்.
காலக் கொடுமையால் புலம் பெயர்ந்தீர்கள்.
ஆனாலும் 'தலையாய' கோணேசர் பூமி மீதான தீராக் காதல் மட்டும் இறப்புவரை தணியவில்லை.
மண்இழப்பு பற்றிப் பேசும் போது, வெஞ்சினம் கொணடெழுவீர்களே அக்கா!.
அதில் வெளிப்படும் ஆத்மாவேசம் சத்தியமானது.
மரணத்தை நோக்கிய வாழ்விலும் சலனமில்லை.
இவர் மரணத்தை எண்ணி கலங்கவுமில்லை.
இயற்கை தனக்கு அளித்த வாழ்வினை சிறப்போடு வாழ்ந்தார்.
ஆயினும் கடந்த சில மாதங்கள் நோயின் வலியோடு வாழ்ந்தார்.
'பலனளிக்காத சிகிச்சை தரும் பெரும்வலியைவிட, இயற்கை மரணத்தை ஏற்றுக் கொள்வேன்' என்கிற திடமான முடிவினை மேற்கொண்டார் செல்வி அக்கா.
நீங்கள் மரணத்துள் வாழ்வீர்கள்.
சென்று வாருங்கள்.
நீங்கள் விட்டுச் சென்ற உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு பத்திரமாய் இருக்கும்.
உங்கள் 'மானுடம்' பேசும் சீரிய உணர்வுகள், எம் வரலாற்று வேருக்கு நீரூற்றும்.
இதயச்சந்திரன் -லண்டன்