எவரும் ஒளியை ஏற்றி மரக்காலினால் மூடி வைக்க மாட்டார்கள். அது மற்றவர்க்கும் ஒளி கொடுக்கும்படியாக விளக்குத் தண்டின் மேல் ஏற்றி வைப்பார்கள், உலகின் ஒளி நீங்கள். உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்வதாக!| என்று வழிகாட்டிய இறைமகன் கிறீஸ்து இருளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு ஒளியாகத் தோன்றியபோது. விழிப்போடிருந்தவர்கள் அந்த ஒளியைத் தேடி நாடி ஓடி வந்து தரிசனம் பெற்றார்கள்.
அவர் ஒளியாக இருந்தார். தன் இனத்தவர்க்கு மட்டுமல்லாது, பிற இனத்தாருக்கும் அவரே ஒளியாக அமைந்தார். எனவே அனைவரும் அந்த ஒளியில் தம் வாழ்வைக் கண்டடையும்படியாக விளக்குத் தண்டின் மீதல்ல, வானத்திலே வால்வெள்ளியாகத் தோன்றி வழிகாட்டி, ஒளியைத் தேடும் மக்கள் தன்னை நாடி வரப்பண்ணுகின்றார்.
அவரை எளியவரான இடையர்கள் உடனே தரிசிக்கின்ற பாக்கியம் பெற்றார்கள். படித்தவர்களும், மேதைகளும், ஞானியருமாக இருந்தவர்கள் தம் கணிப்பின்படிக்கு அந்த ஒளி பிறந்த திசை நோக்கிச் சிட்டாகப் பறந்து வந்தார்கள். அவர்களுக்கு அந்த ஒளி வழிகாட்டியது. அவர்களும் வாழ்வான அந்த தெய்வத்தைக் குழந்தை வடிவில் கண்டு ஆராதித்தார்கள். இருளில் வாழ்ந்தவர்களுக்குத் தான் ஒளியின் மகிமை புரியும். ஓளிக்காக ஏங்கியவர்கள்தான் தம் இருளிலிருந்து விடுபடும்படியாக அந்த ஒளியைத் தேடிச் செல்வார்கள். இருளின் அடிமைத் தனத்தில் ஊறிப் போனவர்கள், அந்த இருளே கதியென்று கிடப்பவர்கள், இருளை விட்டால் வேறு நாதியில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒளியின் முக்கியத்துவமும், மகிமையும் புரியாது.
இறைமகன் கிறீஸ்து ஒளியின் பிறப்பிடம், வாழ்வின் இருப்பிடம், அருளின் தரிப்பிடம். எனவே, அந்த ஒளி மக்களுக்காக ஒளிரும்படியாக மண்ணுக்கு வந்தது. தன்னிடம் இருந்தவற்றை முற்றும் முழுவதுமாக மற்றவர்க்கு வாரி வழங்கியது. அவர் போன்று ஒளியாக மற்றவர் முன்னே நாமும் ஒளிர வேண்டும் என்பதே நம் குறித்து அவருக்கிருக்கும் ஆசை.
ஓளியாக நாமிருக்கின்றோம். பலருக்கும் இது குறித்து தெரிவதில்லை. உணர்ந்து கொள்வதுமில்லை. மாறாக, ஒளியை வெளியில் தேடித் திரிகின்றார்கள். தமக்குள் தேடிக் கண்டு கொள்ள வேண்டியதை புறத்தே தேடி காலத்தை மட்டுமல்ல, தம் வாழ்வையே வீணடித்து விடுகின்றார்கள். ரிக் வேதம் ஷஓம் தத்வ மஜே| என்கின்றது. அதாவது, எல்லாம் என்பது நீயே என்று நம்மை அது இனங்காட்டித் தருகின்றது. இருளும் நான்தான், ஒளியும் நான்தான்! அடிமைத்தனமும் எனக்குள்தான் சுதந்திர உணர்வும் எனக்குள்தான். சமயத்தில் அறிவிலிகளாக இருக்கின்றோம், வேளையில் எல்லாம் உணர்ந்தவர்களாகவும் அமைகின்றோம். எனக்குள் இருக்கும் ஒளியைக் கண்டு கொள்ளவும், அதை மனிதர் முன் ஒளிரச் செய்யவும்தான் இறைவன் மனுவானார். (தொடரும்)
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்