சேர்ந்து பயணித்த விந்தணுக் கூட்டத்தில்
நான் மட்டும் விரைவாக நீந்திக் கடந்து
கருவாகி, உருவாகிய கெட்டிக்காரன்........
"துரோகி" அல்லவா நான் !!
உலகத்தைப் பார்க்க வேண்டிய அவசரத்தில்
உதிரத்தால் வாழ்க்கை தந்த அன்னையை
மரணவலிக்கு ஆளாக்கிப் பிறந்தவன்........
"சுயநலவாதி" அல்லவா நான் !!
தன் வயிறு நிரப்பினாளா என்றறியாமல்
என் பசிக்கு ஐந்து நேரம் பால் வேண்டி
நெஞ்சுறிஞ்சிப் பசிதீர்த்த குழந்தை.......
"இரக்கமற்றவன்" அல்லவா நான் !!
ஏழ்மையிலும் சாமித்தட்டில் போட்டிருந்த
பத்துச் சதங்கள் இரண்டைப் பொறுக்கி
பல்லி மிட்டாய் வாங்கிச் சுவைத்தவன்......
'திருடன்" அல்லவா நான் !!
நண்பனோடு பள்ளியிலே சண்டையிட்டு
நகக்கீறல் உடலெங்கும் வந்த செய்தியை
வழுக்கி விழுந்ததென்று சமாளித்தவன்.....
"பொய்" சொல்பவனல்லவா நான் !!
அகதியுரிமை விண்ணப்பப் படிவத்தில்
குடியுரிமை வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில்
புலிகளாலும் எனக்குப் பிரச்சனை என்றேன்...
"தேசத்துரோகி" அல்லவா நான் !!
"இவரைத் தெரியுமா உனக்கென்று"
இந்திய இராணுவம் வினவிய போதும்
"புலிகளின் செயற்பாடு பிடிக்குமாவென்று"
சிங்கள சிப்பாய்கள் சீற்றம் கொண்டபோதும்
கொண்டு வந்த "ஏஜென்சி" யாரென்று
வந்திறங்கிய நாட்டுக்காரன் கேட்டபோதும்
நண்பர்களுடன் நாட்களைக் கழித்து விட்டு
நல்ல பிள்ளை வேசம் வீட்டில் போட்டபோதும்
இன்னும் இதரபல இக்கட்டான கட்டங்களிலும்
தவறியும் "மெய்" உரைக்க நினைத்ததில்லை..
சந்தர்ப்பங்களில் திருடனாகவும்
சகட்டுமேனிக்கு பொய்யனாகவும்
தேவைகளின் போது துரோகியாகவும்
சூழ்நிலைகளில் சுயநலக்காரனாகவும்
இன்னும் சமயங்களில் இரக்கமற்றவனாகவும்
இருந்து வந்த பலரில்..நானும் !!!!
இருப்பினும்,
அடுத்தவரைப் புண்படுத்த நினைப்பதில்லை.
தேவைதாண்டி ஆசையெதிலும் இருப்பதில்லை.
அறியாமல் தவறேனும் இழைத்திருந்தால்
மன்னிப்புக் கேட்க நானும் தயங்குவதில்லை..
ஏனெனில்,
நான் ஒன்றும் உத்தமனல்ல !!!
சுதா-கனடா