LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

இறைவனுக்கு இடம் கொடுப்போம் -31



இறைவனுக்கு இடம் கொடுப்போம்

எமது வாழ்வில் எல்லாவற்றுக்குமே ஒரு காலமுண்டு. மகிழ ஒரு காலம், துக்கிக்க ஒரு காலம், அனுபவிக்க ஒரு காலம். ஓய்வுக்கு ஒரு காலம்! இப்படியாகச் சில காலங்கள் நம் வாழ்விலே.

இயற்கையைப் பார்த்தால் அங்கேயும் மாரிக்கு ஒரு காலம் கோடைக்கு ஒரு காலம், இலை உதிர்க்க ஒரு காலம், அது தழைக்க ஒரு காலம்.

கல்வியிலே படிக்க ஒரு காலம், ஓய்வுக்கு ஒரு காலம்.

ஆண்டுகளில் எமக்கு இது தவக்காலம்! வருகைக் காலம் நம்மை மகிழ்விக்க வந்தது. இப்போது தவக் காலம் எம்மை சிந்திக்கச் செய்ய வந்துள்ளது. இது காலவரையிலும் இறைவனுக்கு நம் வாழ்வில் முக்கிய இடத்தை, முக்கிய இடத்தை என்ன சிறுதளவு இடத்தையேனும் நாம் தராமலிருந்தால் அதையிட்டு யோசிக்கவும், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவும் எம்மை அழைக்கின்ற காலம் இது.

இறைவன் வாழும் இடம் ஒரு அமைதி;ப் பூங்காவாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கு சமாதானமும், நிம்மதியும் நிறைந்திருக்கும் என்பதிலும் இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. இன்று நம் நிம்மதியைத் தொலைத்துவிட்டவர்களாய் அதைத் தேடிக் கொண்டு, சமாதானத்தை இழைந்தவர்களாய் அதற்காக ஏங்கிக் கொண்டு, சாந்தியின்றி அல்லல் படுகின்றோமே, அது ஏன்?

நமது மனத்தில் இறைவனுக்கு இடமில்லாமல் நாம் செய்த கொடுமைதான் எம்மை அமைதியவர்களாய், சமாதானமற்றவர்களாய், சாந்தியற்றவர்களாய் அலைக்கழிக்கின்றது என்பதை நாம் அனேகமாக சிந்தனையில் எடுத்துக் கொள்வேதயில்லை. இந்த உலகக் காரியங்கள் எம் நெஞ்சத்தில் வேறு எதற்கும், வேறு எவருக்குமே இடமில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டன. நம் நெஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது நாம் மட்டுமேதான். நமக்கென்றொரு இராச்சியத்தை நமக்குள்ளே நாம் அமைத்துக் கொண்டு, தனி இராசாவாக அரசு புரிகின்றோம். ஆனாலும் அங்கு மகிழ்ச்சி இல்லை, நிம்மதி இல்லை, சமாதானம் இல்லை. நமக்குள்ளே நாம்தான் நமக்கான சமாதானத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியை உருவாக்கிக் கொள்ள முடியுமே தவிர உலகார்ந்த எவையுமே அவற்றை எமக்கு வழங்கிவிட முடியாது. நம் வீட்டை பொன்னாலும், பொருளாலும் நிரப்பி வைத்தாலும் அவை நாம் nதுடம் சமாதானமும், நிம்மதியும் நமக்குக் கிட்டா. மாறாக எதிர்மறையான விளைவுதான் ஏற்படும். அவற்றை எப்படிப் பாதுகாப்பது என்ற கவலைதான் நம்மை மேலதிகமாக வந்து ஒட்டிக் கொள்கிறது.

நமது இதயத்தை இறைவனுக்காகத் திறந்து வைத்து, அவரை அங்கே கோயில் கொள்ள வைத்து அவர் வழியில் வாழ நாம் முற்படும்போது மனதில் சாந்தியும், சமாதானமும் உருவாகிவிடும். இதற்காக பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதுமில்லை, பெருஞ் சிரமங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுமில்லை.

ஒரு தாமரைக் குளத்தைப் பார்க்கின்றபோது அங்கு கதிரவனின் ஒளி எந்த அளவுக்கு வீச்சுக் கொண்டதாக அமைகிறதோ, அந்த அளவுக்கு அங்கே தாமரைப் பூக்கள் மலர்ந்திருப்பதைக் காண முடியும். மர நிழலில் இருக்கின்ற தாமரைக் கொடியில் பூக்கள் அதிகம் இருப்பதில்லை. எமது மனத்திலும் எந்த அளவுக்கு இறைவனின் ஒளி படர்கிறதோ அந்த அளவுக்கு அங்கே சமாதானம் மலர்கின்றது என்பது மட்டும் உண்மை. தூமரைத் தண்டின் உயரம் அது இருக்கும் நீரின் ஆழத்தைப் பொறுத்தது என்பது ஒரு உண்மை. இறைவன் அருள் எம்மில் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு எம் வாழ்வு உயர்ந்திருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இந்தக் கால கட்டத்தை நாம் பயன்படுத்துவது அவசியமானது. அதற்காகவே நாம் இக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம்.

உண்மையான, ஆழமான தியானத்தில் ஈடுபட்டு இறைவனோடு ஒன்றித்து வாழ முற்படுகின்றபோது, அவருக்காக எம்மனதைத் திறந்து வைத்து அருள் வேண்டி நிற்கின்றபோது இந்த மகிழ்ச்சியும் சமாதானமும் நம்மோடே குடியிருக்கும் என்பது மட்டும் உண்மை! ஒரு சிறு பொழுதேனும் எமது வாழ்க்கை என்பது இன்று உண்மையில் என்ன என்று நாம் ஆராய முற்படுவோமானால், நாம் எம்மைச் சுற்றிலுமுள்ள மாயையை இனங்கண்டு கொள்ள முடியும். எம் வாழ்வின் யதார்த்த நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்வோமானால் இந்த மண்ணில் நாம் வாழுகின்ற வாழ்வு எத்துணை போலித்தனமானது என்பதை நாம் உணர்ந்து கொள்வதுடன், இறைவன் ஒருவர்தான் எம் வாழ்வுக்கு உண்மையான ஒரு கருத்தை, ஆழத்தைத் தரமுடியும் என்பதை அறிந்து கொள்ளவும் முடியும்.

எனவே நாம் இந்தக் காலத்தின் கட்டாயம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதுடன், இந்தக் காலத்திற்குரிய செயல்களிலும் தயங்காது ஈடுபடவேண்டும். இறைவனை மனதிற்குள் சிறைப்படுத்தவும், அவரது அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ளவும், அதன் மூலமாக நாம் விரும்பித் தேடுகின்ற அமைதியையும், சமாதானத்தையும் நம்மிலே உருவாக்கிக் கொள்ளவும் தயங்காது நாம் முன்வருவோமாக.

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்










 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7