ஆழ நடுக்கடலிலே தத்தளிக்கும் படகுக்கும், அதன் ஓட்டிக்கும் வான் நட்சத்திரம் வழி காட்டும்!
அந்தகார இருட்டினிலே தடுமாறுபவனுக்கு மின்மினிப் பூச்சி கூட வழி காட்டும் !.
பாதையைத் தவற விட்டவனுக்கு அறிவித்தல் பலகை வழிகாட்டும்! ஆனால் பாதை தவறியவனுக்கு யார் வழிகாட்டி? எது வழிகாட்டும்? கடவுளை நம்புபவனுக்கு வழிகாட்டி என்ற ஒன்று தேவையா? நாம் அறிந்த கதை ஒன்று இருக்கிறது. ஒருவன் தான் பட்ட, பட்டுக் கொண்டிருந்த வேதனைகளை இயேசுவிடம் சொல்லி அழுது 'இந்த உலகில் நான் தனித்துப் போனேன், என் கூட யாருமில்லை என்கிற அளவுக்கு நான் நாதியற்றுப் போனேன். என்னோடு நீர் வரவேண்டும். நான் போகும் இடமெங்கும் கூடவே துணையாய் நீர் வரவேண்டும். அப்படி வருவதை நான் மண்ணிலே படியும் உமது காலடித் தடங்களைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்..' என்று கேட்டுக் கொள்ளுகின்றான். தன் நீண்ட நாள் விசுவாசமுள்ள பக்தனுக்கு இறைவன் அவன் கேட்ட வரத்தைக் கொடுக்கிறார்.
அன்று முதல் தான் எங்கு போனாலும் இயேசுவின் பாதச் சுவடுகள் தனது கால் சுவடுகளுக்குப் பக்கத்திலேயே வருவதைக் கண்டு மனம் ஆறுதல் கொண்டான். தான் போகின்ற பயணத்திலெல்லாம் இயேசு கூடவே வருகிறார் என்ற அறிவு அவனுக்குப் புதுத் தெம்பை அளிக்கின்றது. தன்னை நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு துணிவுடன் முகம் கொடுத்துக் கொண்டு தன் வாழ்வைத் தொடர்கின்றான்.
இருந்தும் ஒரு காலகட்டத்தில் அவனால் தாங்க முடியாதென்கிற அளவுக்குச் சோதனைகள் அவனைச் சூழ்கின்றன. தளர்ந்து போகின்ற அவன் தன்னோடு இயேசு வருகின்றாரா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள திரும்பி ஒரு முறை பார்க்கின்றான். பார்த்தவன்; ஏங்கிப் போய்விடுகின்றான். அங்கே இயேசுவின் சுவடுகளைக் காணவில்லை. ஒரேயொரு சோடிக் கால்களின் தடம் மட்டும் தெரிகிறது. அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகின்றது. இயேசுவிடம் வாய்விட்டு அரட்டுகின்றான் 'என் இயேசுவே, என் கூடவே நடந்து வருவதாக வாக்களித்து, இதுவரையிலும் அதைப் பேணி வந்தீரே! இதோ தாங்கவொண்ணா துன்ப வேளையில் என்னைத் தனியாக நடக்கவிட்டு நீர் மட்டும் ஒதுங்கிக் கொள்ளுவது நியாயமா?' என்று புலம்புகின்றான். இயேசு கூறுகின்றார்: 'மகனே நன்றாக உற்றுப் பார். இங்கு நீ காண்பது உனது காலடிகளல்ல என் காலடிகளே! துன்பம் தாளாது சோர்ந்து போன உன்னை நான் தோள் மீது தூக்கிக் கொண்டு நடக்கின்றேன். அதுதான் ஒரு சோடிக் காலடிகள் தெரிகின்றன. இன்னும் உற்றுப் பார்த்திருந்தால் பாரத்தில் அழுந்திப் பதியும் என் கால் தடங்கள் உனக்கு உண்மையைப் புரிய வைத்திருக்கும்.'
ஆபத்திலும் சரி எந்த வேளையிலும் சரி எமக்குப் பக்கத்துணையாக வரக் கூடியது இறைவன் ஒருவனே. எந்த இக்கட்டு எமக்கு வந்தாலும் எம்மை வழி நடத்திடும் தெய்வம் அவரே! நமக்குச் சரியான பாதை தெரியக் கூடியதாக உண்மை ஒளியை அவரால் மட்டுமே பிரகாசிக்கச் செய்ய முடியும். அந்த உண்மை ஒளியைத் தேடிச் செல்ல வேண்டியது நமது கடமை. அதைவிட்டு தூரத்தே தெரியும் நிச்சயமற்ற மங்கலான வெளிச்சத்தை நாடினால் அது எமது மடமை!
அதே சமயம் தற்காலிகமாக இறைவனின் ஒளியை நாடி விட்டு துன்பச் சூழல் கடந்த பிறகு இனி நம் வழி என்று தனி வழி தொடரப் புறப்பட்டோமானால் ஒரு கட்டத்தில் எந்த ஒளியையும் கண்டு கொள்ள முடியாத குருடராக நாம் மாறிவிடக் கூடும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பலனில்லை!
(தொடரும்)