பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்குறித்து சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி ஊடாக ஆணைக்குழுவின் செயலாளருக்கு, அவர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளர் ஒருவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியங்களால் கடுமையாக அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரி வெளிப்படுத்திய கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறித்தும் கடிதத்தின் மூலம் ஆணைக்குழுவின் கவனத்துக்கு ரிப்கான் பதியுதீனின் சட்டத்தரணி கொண்டுவந்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பயங்கரவாதி சஹ்ரான், 2018 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு மன்னார் படகுத்துறையில் படகு வழங்கியதாக, முன்னாள் புலனாய்வுத் துறை பணிப்பாளர் தெரிவித்திருந்தமையை முற்றிலும் மறுப்பதாகவும் அவ்வாறு சாட்சியமளித்தவரின் அடிப்படையற்ற கருத்துக்களினால் ரிப்கான் பதியுதீனின் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சேவையாளரின் உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும், அவரது கருத்தினை பெற்றுக்கொள்வதற்கும் வசதியாக ஜனாதிபதி ஆணைக்குழு, அவர் சாட்சியமளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என குறித்த கடிதத்தில் சட்டத்தரணியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)