![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfmo3V6j-u6F_Crmj6QSARHXcmsEnVtMdxwe_VnLCHHMx7ZJp26Ipv850a6t9nhEa0hGhYsxCpl-MIcTJyUWz_1RDXFWKNPEuFIutR-py-DXoSZyM24AvR3LGIACnJLkBA7G3-T3fk2MQ/s320/vijayakanth-720x450.jpeg)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிரப் பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன.
இதில் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் பல இடங்களில் மதுப் பிரியர்கள் போதைக்காக வார்னிஷ் உள்ளிட்டவற்றைக் குடித்து விட்டு உயிரிழந்தனர்.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மே 17 வரை நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது.
அதன்படி தமிழகத்தில் மதுபானக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இதற்கு மருத்துவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பொது முடக்கம் முடியும் வரை மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்த நிலையில் தற்போது தே.மு.தி.க கட்சித் தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தே.மு.தி.க. வரவேற்கிறது. இது மதுக்கடைகள் திறக்கக்கூடாது எனப் போராடிய தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழக உயர்நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராகத் தமிழக அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது” என அதில் கூறியுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)