கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வதற்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இணைய செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த காணொளி தொடர்பாடல் மூலமான செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த இணையச் செயலமர்வில் (Webinar) கருத்து தெரிவித்திருந்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரி சுஜா கே.மேனன் தெரிவிக்கையில், அரசாங்கத்திற்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் இடையிலான ஒன்றிணைந்த முயற்சிகள் துரிதமான பொருளாதார மீட்சியினை உறுதிப்படுத்துமென குறிப்பிட்டார்.
மேலும், அண்மையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தனது நியமன சான்றிதழை ஜனாதிபதியிடம் காணொளி மாநாடு மூலமாக சமர்ப்பித்திருந்தமை இலங்கையிலும் இந்தியாவிலும் முதன்முதலாக நடைபெற்ற ஒரு நிகழ்வென அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், கொவிட்-19 நோயினால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தின் புத்தாக்கமான பயன்பாடு மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில், ஆசியான் (ASEAN) இந்திய மையம் (AIC), மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் பொறிமுறை (RIS) ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் பிரபிர் தே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஞ்சுள டி சில்வா, ASSOCHAM நிறுவனத்தின் செயலாளர் நாயகம் தீபக் சூத், ASSOCHAM நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் கொஸ்மோஸ்(Cosmos) குழுமத்தின் தலைவருமான அனில் கே அகர்வால், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைமைப் பொருளியலாளர் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)