![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVhoVkfO12YXte4gAZU2E3fArbcwifCAXLCHOyDqmtDhgmaSeUa0PDqPqRpYFj5PePcWvIu8tm4Q2jK14MpbR3fxIlbHEZtuTe8Jl0nsHV19AOH1JQNHx0LNcDZ621VgXDCaw4S6fcetw/s320/Thattunkal.com.jpg)
நீதிகோரி கடந்த மூன்று வருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் காலமாகியுள்ளார்.
முகமாலையைப் பிறப்பிடமாகவும் மந்துவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே கடந்த புதன்கிழமை காலமானார். அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அவரது இல்லத்தில் நடைபெற்றதன.
தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதி யுத்தத்தில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் மூன்று ஆண்டுகளாக முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவர் கடந்த சில மாதங்களாக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக மண்ணுக்கு ஈர்த்த இந்தத் தாய்க்கு, தனது பிள்ளைகள் பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால்தான் நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் இவருடன் சேர்த்து 60இற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)