![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiZ5OedzbIEAHlwUNn-UXreb2hQuf_GcYySQkzidIDqjKwYQBY80_hqgzRZwxiVyMrjureSEdbgXxH7-IDsq87OHj95bn8jGqJkJoGcXJHdRk6QOwJLx6048H9_TmSv_pJGRo1pWBd500/s320/Thattunkal.com.jpg)
சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது, அச்சுவேலி-தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தபோதும் நேற்று இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவரை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதும் பொலிஸார் அங்கு செல்லும்போது அடாவடியில் ஈடுபட்டவர்கள் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கைதானவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)