ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமருக்கு காணப்படும் அதிகாரத்தை தன்னகப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகின்றன.
இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை, அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகக் காண்பிக்க முயற்சிக்கின்றனர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரங்களையும் தன்னகப்படுத்திக் கொண்டு முழுமையான நிறைவேற்றதிகார ஜனாதிபதியாவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சிப்பதற்கான நோக்கமும் இதுவேயாகும்” என குறிப்பிட்டுள்ளார்.





