ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





