![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh06cpul6fOm6fVqPny5kvFY7avcgqkyidQJ5Egde6BM26EeF6J_pjqPhRzo2dcqLCJOp0qvDbwSIDnliQSn_GxQwompbe7wwAEFAbKCagXur538NONcjIdwLkqT8z6yeXoWYXQooxLvVI/s320/Child-Abused-700x450.jpg)
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறிய தந்தை, தரகர் என இருவர் கைதாகியுள்ளனர். அத்துடன் மேலும் 5 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் தரகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8ஆம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரை கையடக்கத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இலாபகமாக பேசி அவரை கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியின் சிறிய தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்ததாகவும் அவரை சிறிய தந்தையார் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதுடன் சிறுமியை அவரது வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தரகர் ஒருவரும், ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
அத்துடன் சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அவர்கள், ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பாலியல் தொழிலுக்கான விடுதிகள் இயங்கி வருவதாகவும் தலைநகரில் இரண்டு விடுதிகள் இயங்கி வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறிய தந்தையார், மற்றும் 35 ஆம் காலனி, வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். இதன்போது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் உட்பட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)