![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9hA7qKI2_ENUsrI7UyTYeyVPoiwqVuh00ibdwhWgavqG9Qfk4Y6AVTlyx-9g7oGRxk5_c41qi5b5aBqmGUYqVN4Z46oF9-vRs9EJ7kA6BWcs6xOLApAJ-EM9BdEHoLePQoF1voRr0Mo0/s640/Kargil-War-anniversary-Rajnath-Singh-lights-Victory-Flame-from-National-War-Memorial.jpg)
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றி வைத்தார்.
காஷ்மீர் உட்பட 11 முக்கிய நகரங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கில் ஜோதி, வரும் 26ஆம் திகதி டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருக்கும் அணையாஜோதியுடன் சங்கமமாக்கப்படும்.
காஷ்மீர் எல்லைப் பகுதியான கார்கிலில் கடந்த 1999ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்களுக்கு நடந்த இந்தப்போரின் இறுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த அனைத்து பகுதிகளையும் இந்தியா மீட்டது.
சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்தது. 1,863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
இந்தப்போர் முடிவுக்கு வந்த ஜூலை 26ஆம் திகதியை ‘கார்கில் வெற்றி தினமாக’ ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது. அந்த வகையில் 20ஆவது கார்கில் வெற்றி தினம் வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)