![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTk-nvnKbFcyRdWCcZQiikz0iWu4iG9d4rXWctotnqP_LQ8Ub_DOakDBHXzx6GrMOcrrRl_K81jrIHFSZ651R-2yKlo87JBX4MYEME8JeLVX9MGZG8HT85KXr_NHhuJzxeEA4EekXkO1k/s320/EAAadW7VUAESUZm-1.jpg)
சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள படம் காப்பான்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
அவர் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த ‘காப்பான்’ படம் நிச்சயம் வெற்றி பெறும். சூர்யா விடாமுயற்சியால் முன்னேறி இருக்கிறார். ‘நேருக்கு நேர்’ படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்படி இல்லை.
அதன்பிறகு பாலாவின் ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் சிறந்த நடிகனாக தன்னை செதுக்கி உயர்ந்த இடத்துக்கு வந்தார்.
‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவகுமார் வளர்த்து இருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள்.
அண்மையில் புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சை ஆனது. ‘ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார்’ என்று இங்கே கூறினார்கள்.
சூர்யா பேசினாலே மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகள் செய்து வருகிறார்.
எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)