கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 60 சதவீதம் அதிகரித்து 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அடுத்த சில ஆண்டுகளில் மேலும் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இடம்பெற்று வருகின்றன.
இந்தியாவுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் நதிர் பட்டேல் இதுபற்றி கூறுகையில், தனது நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் ஆரம்ப வாய்ப்புகள் தீர்க்கமானதாக இருந்ததாகவும், தற்பொழுது வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி கடந்த சில வருடங்களில் இந்த வர்த்தகப் பரிமாற்றங்கள் 60 சதவீதமாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பேச்சுவார்த்தைகள் மெதுவான வேகத்தில் நடைபெறுவதால் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது விரைவில் நடக்கும் என்று தான் நினைக்கவில்லை எனவும், ஆனால் இரு தரப்பினரும் ஆர்வமாக உள்ளார்கள் என்றும் உயர்ஸ்தானிகர் நதிர் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.





