குடாநாட்டில் உள்ள இராணுவ சோதனைசாவடிகளின் எண்ணிக்கைகளை குறைப்பதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பாகங்களில் இல்லாத அளவுக்கு வடக்கில் சோதனை சாவடிகள் அதிகமாக உள்ளதாகவும் சோதனை சாவடிகளில் கெடுபிடிகள் இருப்பதாகவும் அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் கட்டளை தளபதியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதன்போது, தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே தமது கரிசனை என தெரிவித்த கட்டளை தளபதி, தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகவும் உறுதி அளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.





